Sunday, May 19, 2013

எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது? எந்த படிப்பு படிப்பது ?

 
       
                              
                                              ச.நாகராஜன்

  எந்தத் துறையைத் தேர்ந்தெப்பது, எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்ற கேள்வி இன்றைய இளைஞர்கள் அனைவருக்கும் எழும் ஒரு கேள்வி. இதற்குப் பண்டைய கவிஞர் தரும் விடை பொருள் பொதிந்த ஒன்று.
யத்கர்ம குர்வதோஸ்ய ஸ்யாத்பரிதோஷோந்தராத்மன: I
தத் ப்ரயத்னேன குர்வித விபரீதம் து வர்ஜயேத் II

(யத் – எந்த கர்ம – வேலை விபரீதம் – விபரீதமானதை
வர்ஜயேத் – தவிர்த்தல் வேண்டும்)
எந்த வேலையானது சந்தோஷத்தைத் தருமோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.அதற்கு மாறாக உள்ள எதையும் தவிர்த்து விட வேண்டும்.
ஆக மனதிற்குப் பிடித்த படிப்பைத் தேர்ந்தெடுத்து அதில் தேறி அந்தத் துறையில் வேலையில் சேர்ந்து அதில் முன்னேற வேண்டும்.இதுவே கவிஞர் தரும் அறிவுரை.
சரி, எப்படிப்பட்ட பணம் நம்மிடம் நிலைக்கும்? இந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கிறது:
அக்ருத்வா பரசந்தாபமகத்வா கலமந்திரம் I
அயாசித்வா பரம் கச்சித் யத் ஸ்வல்பமபி தத்பஹு II
(ஸ்வல்பம் – குறைவாக; தத் பஹு – அதுவே அதிகம்)

மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல்
ஒரு ரௌடியின் வீட்டிற்கும் செல்லாமல்
யாரிடமும் பிச்சை எடுக்காமல்
சொல்பமாகக் கிடைத்தாலும் கூட எனக்கு எது கிடைக்கிறதோ
அதுவே எனக்கு அதிகம்.

அற வழியில் மற்றவர்களைக் கொள்ளை அடிக்காமல், கீழான ஒருவனின் தயவுமின்றி, லஞ்சம் கொடுக்காமல். எனக்குப் பிடித்த வேலையைச் சந்தோஷமாகச் செய்யும் போது எனக்கு எந்த வருவாய்  கிடைக்கிறதோ அதுவே எனக்குப் போதும் !
இந்த மனப்பான்மை தொன்றுதொட்டு இந்த நாட்டில் இருந்து வந்திருக்கிறது. ஆகவே கிராமங்களில் வாழ்ந்து வந்தவர்கள் கூட மனத் திருப்தியுடன் நன்கு வாழ்ந்து வந்தனர்.
என்று ஆங்கிலேயன் வகுத்த ஆபீஸும் அதில் ‘குமாஸ்தா; உத்தியோகமும் வந்ததோ அன்றிலிருந்து கல்வி முறையானது உத்தியோகம் சார்ந்ததாக ஆகி அதற்கான டிகிரிகளை அச்சிட்டுத் தரும்
ஒரு வழிமுறையாகி விட்டது!
சரி.  

இந்தக் கல்வி முறையை ஒரே நாளில் நம்மால் மாற்ற முடியாவிட்டாலும் கூட , நமக்குப் பிடித்த துறையையாவது தேர்ந்தெடுத்து முன்னேறலாம் இல்லையா! சிந்திப்போம், செயல்படுவோம்!!

No comments:

Post a Comment